இலங்கையின் பல பாகங்களில் அதிகரித்து வரும் வெப்பமான வானிலை காரணமாக, பாடசாலை மாணவர்களைப் பாதுகாப்பதற்கான விசேட வழிகாட்டுதல்களைக் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, மதிய வேளைகளில் மாணவர்களை வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், தற்போது நடைபெற்று வரும் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக ஆலோசனைகள் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுரா செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களுடன் மொனராகலை, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டெண் (Heat Index) 'எச்சரிக்கை' மட்டத்தில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் போதுமான அளவு நீர் அருந்துமாறும், நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறும், அதிக களைப்பை ஏற்படுத்தும் வெளிப்புறச் செயற்பாடுகளைக் குறைத்துக்கொள்ளுமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக