அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டியில், இந்திய அணி மூன்றாவது முறையாகக் கிண்ணத்தை வென்று சாதனை படைத்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து மைதானத்தில் நடந்த கொண்டாட்டத்தின் போது, இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தேசியக் கொடியைத் தனது உடலில் போர்த்திக்கொண்டு நடனமாடியதுடன், மேடையில் படுத்திருந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. பாண்டியாவின் இச்செயல் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, பூனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஜித் கான் என்பவர் சிவாஜிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தியக் கொடி விதிமுறை (Flag Code of India) மற்றும் தேசியச் சின்னங்கள் அவமதிப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இப்புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாண்டியாவின் செயலைக் கண்டித்துச் சிலர் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில், வெற்றிக் களிப்பில் உணர்ச்சிவசப்பட்டுச் செய்த காரியம் என அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள், இது குறித்துச் சட்டரீதியான விசாரணைகளை முன்னெடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர். வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் எழுந்துள்ள இந்த விவகாரம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக