கொழும்பின் முக்கிய பகுதிகளான மிரிஹான, மஹரகம, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸை ஆகிய இடங்களில் வசதி படைத்த வீடுகளை இலக்கு வைத்துத் திட்டமிட்ட முறையில் திருட்டுகள் அரங்கேறி வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டு உரிமையாளர்களின் நம்பிக்கையை விரைவாக வென்றெடுக்கும் பணியாளர்கள், பின்னர் சமயம் பார்த்துப் பணம் மற்றும் நகைகளைத் திருடிச் செல்வது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனைத் தவிர்க்க, புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது அவர்களின் தேசிய அடையாள அட்டையின் அசல் மற்றும் நிழற்படப் பிரதியைச் சரிபார்ப்பதுடன், வதிவிடப் பொலிஸ் நிலையத்திலிருந்து பெறப்பட்ட நற்சான்றிதழ் அறிக்கையைக் கோருவது அவசியம் எனப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், பணியாளர்களின் குடும்ப விபரங்கள் மற்றும் அவசரத் தொடர்பு இலக்கங்களை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறும், பெறுமதியான பொருட்களை எப்போதும் பாதுகாப்பான இடங்களில் வைக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பணியாளர்களை வீட்டில் தனியாக விட்டுச் செல்வதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ள பொலிஸார், வேலைக்குச் சேர்க்கப்படும் நபர்களின் விபரங்களை அந்தந்தப் பகுதி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைப்பதன் மூலம் இவ்வாறான குற்றச் செயல்களைத் தடுத்துச் சொத்து இழப்புகளைத் தவிர்க்க முடியும் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக