மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் சூழல், உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவும் சூழலில், இது ஐபிஎல் போட்டிகளின் மைதான ஒளி விளக்குகள் (Floodlights) மற்றும் வீரர்களின் பயணத்தைப் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் இது குறித்து விளக்கமளிக்கும்போது, தற்போதைய சூழலில் ஐபிஎல் அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை என்றும், அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
எரிபொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் ஹோட்டல் நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைகளின்படி, தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மார்ச் 28-ஆம் தேதி பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடர் தொடங்க உள்ளது. போர் பதற்றங்கள் இருந்தாலும், வீரர்களின் பயிற்சி மற்றும் மைதானப் பணிகள் எவ்விதத் தடங்கலும் இன்றி நடைபெற்று வருகின்றன. ஒருவேளை நிலைமை மோசமடைந்தால் மட்டுமே மாற்று நடவடிக்கைகளை ஆலோசிப்போம் என்றும், இப்போதைக்கு ரசிகர்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக