Monaragala மாவட்டத்தின் படல்கும்புரை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற கொடூரமான வாள்வெட்டுத் தாக்குதலில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
பொலிஸார் வழங்கிய தகவலின்படி, ஹயஸ் ரக வானொன்றில் வந்த இனந்தெரியாத வன்முறைக் கும்பல் இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
நேற்று இரவு படல்கும்புரை பகுதியில் நான்கு இளைஞர்கள் நின்றுகொண்டிருந்த வேளையில் அங்கு வந்த கும்பல், அவர்கள்மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் படல்கும்புரை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த ஏனைய மூன்று இளைஞர்களும் அங்கிருந்த பொதுமக்களால் மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதலை மேற்கொண்ட பின்னர் குறித்த வன்முறைக் கும்பல் வந்த வாகனத்திலேயே தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தனிப்பட்ட பகைமையால் நடத்தப்பட்டதா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக விசேட தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக