உலகின் பிரபலமான காணொளி பகிர்வு தளங்களில் ஒன்றான யூடியூப் (YouTube), தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல நாடுகளில் தற்காலிகமாக செயலிழந்திருந்தது. இதனால் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனர்கள் தளத்தை அணுக முடியாமல் சிக்கலில் சிக்கினர்.
செயலியை பயன்படுத்த முயன்றபோது “Something went wrong” (சம்திங் வென்ட் ராங்) என்ற செய்தி திரையில் தோன்றியதாகவும், காணொளிகளை பார்ப்பதிலும், கணக்குகளில் உள்நுழைவதிலும் சிரமம் ஏற்பட்டதாகவும் பயனர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் மட்டும் 2,80,000 முதல் 3,00,000க்கும் அதிகமானோர் தளத்தை அணுக முடியவில்லை என முறைப்பாடு செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. இதேவேளை இலங்கையிலும் பலர் சமூக வலைதளங்களில் தங்களுக்கு யூடியூப் செயல்படவில்லை என பதிவிட்டிருந்தனர்.
“யூடியூப் தற்போது வெற்றுப் பக்கம் போல காணப்படுகிறது. இடதுபுற பக்கப்பட்டி மட்டுமே செயல்படுகிறது; மற்ற அனைத்தும் செயலிழந்துள்ளன” என ஒருவர் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த சில மணிநேரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் தற்போது சீர் செய்யப்பட்டுள்ளதாகவும், யூடியூப் தளத்தின் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பயனர்கள் தற்போது சீரான முறையில் காணொளிகளை பார்ப்பதற்கும், தங்களது கணக்குகளை அணுகுவதற்கும் முடிகிறது என தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக