கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய மாணவி ஒருவர், க.பொ.த சாதாரண தர (O/L) பரீட்சை எழுதத் தயாராக இருந்த நிலையில் குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவியின் தந்தை சில காலத்திற்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குடும்பத்தின் பொருளாதார நிலைமையும் மிகவும் சிரமமானதாக உள்ளதாக கூறப்படுகிறது. குடும்ப வறுமை காரணமாக மாணவியின் சகோதரர் கொழும்பில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுவதற்காக சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்னர் பாடசாலை செல்லும் மாணவன் ஒருவருடன் ஏற்பட்ட காதல் தொடர்பின் விளைவாக மாணவி கர்ப்பம் அடைந்ததாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் அவர் குழந்தை பிரசவித்துள்ளார்.
குழந்தை பிறந்த பின்னரும், மாணவியை சாதாரண தர பரீட்சை எழுதுவதற்காக வைத்தியசாலையிலிருந்து அனுப்பி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கல்வி சமூகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவலை மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குழந்தை பிறக்க காரணமானதாகக் கூறப்படும் இளைஞரை பொலிஸார் தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கேகாலை பொலிஸாரால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக