யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பெரியவிளான் சந்தி பகுதியில் இன்று (8) பட்டப்பகலில் காவாலிகள் இடையே கடுமையான மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், வீதியூடாக பயணித்த பொதுமக்கள் மற்றும் அருகிலிருந்த அயலவர்கள் அச்சமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பகட்ட தகவல்களின் படி, விளானை பகுதியைச் சேர்ந்த காவாலிகளுக்கும், பண்டத்தரிப்பு பற்றிமா கோயிலடி பகுதியைச் சேர்ந்த காவாலிகளுக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் உடல்நிலை குறித்து மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவத்தையடுத்து பெரியவிளான் சந்தி வழியாகச் சென்ற போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டதுடன், பாதுகாப்பு காரணங்களால் பலர் மாற்றுப் பாதைகள் வழியாக பயணித்தனர்.
இதனிடையே, இப்பகுதிகளில் அண்மைக் காலமாக சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன், உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக