யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு, குடத்தனை வடக்கு மற்றும் பொற்பதி குடத்தனை கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளில் 300 ஏக்கர் காணியை பெற்றுக்கொண்டு கோல்வ் மைதானத்துடன் கூடிய சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு மையம் அமைக்கும் திட்டம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) மணல்காட்டில் கிராம மக்களுடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
தனியார் நிறுவனம் சார்பில் காணிகளை பெற மக்களின் விருப்பம் கோரப்பட்டபோது, பிரதேச மக்கள் தமது கிராம சூழலில் காணிகளை வழங்க முடியாது என திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதேச மக்கள், மணல்காடு பகுதியில் தற்போது 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், அதில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்த காணி இல்லாமல் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், கிராமத்தைச் சூழவுள்ள பகுதியில் மொத்தம் 156 ஏக்கர் அரச காணி மட்டுமே இருப்பதாகவும் கூறினர்.
இந்த நிலையில், கிராமத்தில் காணி இல்லாதோருக்கே அரச காணிகள் போதாமை நிலவுகின்ற சூழலில், எதிர்கால சந்ததிகளின் நலனைக் கருத்தில் கொண்டு குறித்த பகுதியில் காணிகளை வழங்க முடியாது என மக்கள் வலியுறுத்தினர்.
இதற்கிடையில், இந்த விடயம் குறித்து தனியார் நிறுவனத்திடம் வினவியபோது, மக்களின் எதிர்ப்பை மீறி கோல்வ் மைதானம் மற்றும் சுற்றுலா மையம் அமைக்கும் பணிகளை முன்னெடுக்கப் போவதில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், யாழ்ப்பாணத்தில் திட்டமிடப்பட்டிருந்த 300 ஏக்கர் சுற்றுலா திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக