2026 ஐசிசி இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி தனது முதல் போட்டியிலேயே வெற்றியுடன் தொடங்கியுள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.
164 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி இலங்கை அணியின் கட்டுப்பாட்டான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களையே பெற்றது. இதன் மூலம் இலங்கை அணி 20 ஓட்டங்களால் முக்கியமான வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த உலகக் கிண்ணத் தொடரின் போட்டிகள் இலங்கையில் கொழும்பு எஸ்.எஸ்.சி., ஆர். பிரேமதாச, கண்டி பல்லேகல மைதானங்களிலும், இந்தியாவில் கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களிலும் நடைபெறவுள்ளன.
இம்முறை உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியை தசுன் ஷானக வழிநடத்துகிறார். அணியில் பதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, சரித் அசலங்க, ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரண மற்றும் ஏஷான் மாலிங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முதல் போட்டியிலேயே வெற்றியைப் பதிவு செய்துள்ள இலங்கை அணி தொடரின் மீதிப் போட்டிகளுக்காக நம்பிக்கையுடன் முன்னேறுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக