ரஷ்யாவில் ஒரே நேரத்தில் வானில் நான்கு நிலவுகள் தோன்றியுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இந்த அரிய காட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பதிவாகியுள்ளது.
பூமிக்கு ஒரே ஒரு நிலவு மட்டுமே உள்ள நிலையில், ஒரே நேரத்தில் நான்கு நிலவுகள் வானில் தோன்றியது பலரிடையே ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இது எவ்வாறு சாத்தியமானது என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவலாக எழுந்துள்ளது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள வானிலை மற்றும் வானியல் ஆர்வலர்கள், இது உண்மையான நிலவுகள் அல்ல என்றும், மாயத்தோற்றம் எனப்படும் Optical Illusion காரணமாக ஏற்பட்ட நிகழ்வு என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு “பாரசெலீன்” (Paraselene) அல்லது “மூன் டாக்” (Moon Dog) என அழைக்கப்படுகிறது.
பூமியிலிருந்து சுமார் 20,000 அடி உயரத்திற்கு மேல் காணப்படும் பனிக்கட்டிகளால் உருவாகும் சிரஸ் (Cirrus) மேகக் கூட்டங்கள் வழியாக நிலவின் ஒளி ஊடுருவிச் செல்லும் போது, ஒளி விலகல் ஏற்படுகிறது. இதன் விளைவாக, உண்மையான நிலவின் இருபுறங்களிலும் கூடுதல் நிலவுகள் போலத் தோற்றமளிக்கும் போலி நிலவுகள் உருவாகின்றன.
பாரசெலீன் நிகழ்வு மிகவும் அரிதான ஒரு வானிலை நிகழ்வாகக் கருதப்படுகின்றது. இதன் காரணமாகவே செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வானில் ஒரே நேரத்தில் நான்கு நிலவுகள் தோன்றியதாகத் தோற்றமளித்ததாக வானிலை ஆர்வலர்கள் விளக்கமளித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக