இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும், சாரதி உட்பட அனைத்து பயணிகளும் இருக்கை பட்டி அணிவது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டி.பி.ஜே. சேனாதீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உரிமையாளருக்கும் பொறுப்பு:
இந்த சட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இருக்கை பட்டி அணியாத பயணிகளுக்கு மட்டுமல்லாமல், அந்த வாகனத்தின் உரிமையாளருக்கும் எதிராகச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். வாகனத்தில் உள்ள அனைத்து இருக்கைகளிலும் பயணிகளுக்கான இருக்கை பட்டி வசதியை ஏற்படுத்தித் தருவதற்கு ஏற்கனவே கடந்த டிசம்பர் 14 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்த காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில், தற்போது சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உயிரிழப்புகளைத் தடுக்க நடவடிக்கை:
இந்த ஆண்டில் கடந்த 25 நாட்களில் மட்டும் இலங்கையில் நிகழ்ந்த 147 விபத்துகளில் 155 பேர் உயிரிழந்துள்ளதாகப் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அண்மைக் காலங்களில் நிகழ்ந்த விபத்துகளை ஆய்வு செய்தபோது, இருக்கை பட்டி அணியாத காரணத்தாலேயே அதிகப்படியானோர் கடுமையான காயங்களுக்கு உள்ளாவதும், உயிரிழப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்தச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும், நெடுஞ்சாலைகளில் நுழையும் வாகனங்கள் மட்டுமன்றி, பயணத்தின் நடுவிலும் திடீர் சோதனைகள் நடத்தப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக