கண்டி – ஹதரலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், பேருந்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஹதரலியத்த டி.பி. இலங்கரத்ன தேசிய பாடசாலையில் 12ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த 17 வயதுடைய அப்சரா தசநாயக்க என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 17ஆம் திகதி, குறித்த மாணவி கண்டி நகரில் உள்ள மேலதிக வகுப்புக்கு சென்று, பின்னர் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பேருந்திலிருந்து இறங்க முயன்ற வேளையில் திடீரென கீழே விழுந்த மாணவி, கடுமையான காயங்களுக்கு உள்ளான நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் ஓட்டுநரான பிரபாத் மேகசூரிய என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் கலகெதர நீதவான் நுவான் குணசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹதரலியத்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, உயிரிழந்த மாணவி அப்சரா தசநாயக்கவின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக