வட மாகாணத்தில் வீதியோரங்களில் அதிகரித்து வரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் வீதி விபத்துகள் மற்றும் சுகாதாரச் சீர்கேடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், விசேட நாய் கருத்தடைச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் வட மாகாணம் முழுவதும் 7,606 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக 15 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழுள்ள கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமும், உள்ளூராட்சி அமைச்சின் கீழுள்ள உள்ளூராட்சித் திணைக்களமும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
மாவட்ட ரீதியாக, யாழ்ப்பாண மாநகர சபையில் 120 நாய்கள், ஏனைய யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் 5,216 நாய்கள், கிளிநொச்சியில் 350 நாய்கள், முல்லைத்தீவில் 750 நாய்கள் மற்றும் வவுனியா மாவட்டத்தில் 1,170 நாய்கள் என மொத்தமாக 7,606 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படவுள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக வவுனியா மாவட்டத்தில் இதுவரை 72 நாய்களுக்கு கருத்தடை சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொடர்ந்து வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண மாநகர சபை, முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை மற்றும் வவுனியா மாநகர சபை உள்ளிட்ட பகுதிகளில் திட்டத்தை அடுத்த கட்டமாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சரவை மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய விலங்கு நலச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, விலங்குகளின் உரிமைகள் மற்றும் நலன்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதுடன், பொதுமக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் விலங்கு நலனை உறுதி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்திற்கு பொதுமக்களும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக