போராளிகள் நலம்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் ‘சமகால அரசியலும் போராளிகள் வகிபாகமும்’ எனும் தலைப்பிலான மாநாடு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசியல், சமூக மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
மாநாட்டின் போது, ‘வரலாற்றின் வேர்கள்’ என்ற பெயரில் சிறப்பு கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட காலத்தில் 2009 மே 18க்கு முன்னர் தங்களது கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து பணியாற்றியதற்காகவும், அந்தக் காலகட்டத்தில் உயிரிழந்தவர்களையும், படைப்பாளிகள், கலைஞர்கள் மற்றும் போராளிக் கலைஞர்கள் உள்ளிட்ட மொத்தம் 25 பேரையும் நினைவுகூர்ந்து கௌரவிக்கப்பட்டது.
நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், கவிந்திரன் கோடீஸ்வரன், ஞானமுத்து ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கேற்றனர்.
மேலும், அரசியல் கட்சி பிரதிநிதிகள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், முன்னாள் போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட காலத்தில் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்ட அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மதகுருமார்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட ஒன்பது பேரின் உருவப்படங்கள் மேடையில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வின் மூலம் சமகால அரசியல் சூழல் மற்றும் போராளிகளின் வகிபாகம் தொடர்பான கருத்துப்பகிர்வுகளும் இடம்பெற்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக