டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல்போன இளைஞன் ஒருவரின் சடலம், இரண்டு மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கெப்பெட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெப்பெட்டிபொல – கவரம்மன பகுதியில் வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் விழுந்த மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் குழுவினால் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், உயிரிழந்தவர் மீராவத்த, வெரலவத்த பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஆர். எம். அசித கோசலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 27 ஆம் திகதி டித்வா சூறாவளியின் தாக்கத்தால் கவரம்மன பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது, மண் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் மீண்டும் ஏற்பட்ட மண் சரிவில் அவர் மண்ணுக்குள் புதையுண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் நிலவிய கடும் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, போக்குவரத்துக்கு அவசியமான அளவிற்கு மட்டுமே மண் அகற்றப்பட்டதுடன், காணாமல்போன இளைஞனின் உடலை மீட்க முடியாமல் போனது.
தற்போது வானிலை நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து, கெப்பெட்டிபொல பகுதியில் வீதியில் விழுந்த மண்ணை முழுமையாக அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் போது, காணாமல்போன இளைஞனின் சடலம் என சந்தேகிக்கப்படும் உடல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கெப்பெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சட்ட நடவடிக்கைகளுக்காக சடலம் நீதிமன்ற உத்தரவின் கீழ் மேலதிக பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக