கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையின் முக்கிய நகரங்களில் காற்றின் தரம் பெரும்பாலும் மிதமான மட்டத்திலேயே காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், எதிர்வரும் நாட்களில் சில பகுதிகளில் காற்றின் தரம் மோசமடையக்கூடும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட சுற்றுப்புற காற்றின் தர அறிவிப்பின்படி, பெரும்பாலான நகர்ப்புறங்களில் நுண் துகள்களின் (PM2.5) அளவு மிதமான மட்டத்தில் பதிவாகியுள்ளது. அதேவேளை, வவுனியா, நுவரெலியா, எம்பிலிபிட்டிய, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் சீரான நிலையில் காணப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணிநேரத்திற்கான முன்னறிவிப்பின்படி, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் உள்ளிட்ட பல நகரங்களில் காற்றின் தரம் மிதமான அல்லது சற்று ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எல்லை தாண்டிய காற்று மாசு காரணமாக வடக்குப் பகுதியிலிருந்து வீசும் மாசடைந்த காற்றின் தாக்கம் அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் நிலவக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் இயன்றவரை முகக்கவசம் அணியுமாறும், குறிப்பாக சுவாச நோய்கள் உள்ளவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் கொண்டவர்கள் மூச்சுத் திணறல் அல்லது சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக