திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி, காசிம்நகர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரஹீம் முகம்மது நிஸ்லான் என்ற இளைஞர், கடற்படையினரால் தாக்கப்பட்டதுடன், தமக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அவரது முறைப்பாட்டின்படி, கடந்த ஜூலை 16ஆம் திகதி பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, கடற்படையைச் சேர்ந்த இரு அதிகாரிகள் தங்களை வழிமறித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் தம்மை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளிலிருந்து இறக்கி, சுமார் 200 முதல் 300 மீற்றர் தூரம் கடற்கரை நோக்கி அழைத்துச் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அருகிலிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளதாகவும், சம்பவ இடத்திற்கு வந்த தனது தாயாரையும் சகோதரியையும் கடற்படையினர் அச்சுறுத்தி தாக்க முயன்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், எவ்வித விசாரணையும் மேற்கொள்ளப்படாமல், கரையில் இருந்த படகொன்றில் தம்மை வலுக்கட்டாயமாக ஏற்றியதுடன், காலில் கனரக கல்லொன்றைக் கட்டி, சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொள்ளாவிட்டால் கடலில் வீசிவிடுவதாக உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தம்மை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றதாகவும், பின்னர் அங்கு வந்த பெற்றோரை துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியதன் பின்னர், தன்னையும் குறித்த படகையும் குச்சவெளி வடக்கு கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைத்து, தமக்கு எதிராக பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென அவர் தனது முறைப்பாட்டின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக