பௌத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, யாழ்ப்பாணம் பொது நூலகம் மற்றும் பழைய மாவட்டச் செயலகக் கட்டடத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, அவற்றின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடினார்.
இந்த விஜயத்தின் போது, யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் சேவைகளை நவீனமயப்படுத்துதல், வாசகர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல், அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள், டிஜிட்டல் நூலக வசதிகளை மேலும் விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு எதிரே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய மாவட்டச் செயலகக் கட்டடத்தையும் அமைச்சர் பார்வையிட்டார். கட்டடத்தின் புராதனத் தன்மையைப் பாதுகாத்து பராமரிப்பதற்கான திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சந்திப்பின் போது, கலாசார மற்றும் வரலாற்று மரபுகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து அமைச்சர் ஹினிதும சுனில் செனவி உரிய அதிகாரிகளுக்கு வழிகாட்டல்களையும் விசேட விளக்கங்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் அரவிந்தராஜ், யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி மேயர் இமானுவேல் தயாளன், யாழ்ப்பாணம் பொது நூலக நிர்வாகத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக