சூடானின் டார்ஃபூர் பகுதியில் ஆப்பிரிக்க ஒன்றிய அமைதிப்படை மீது 2007ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கிளர்ச்சித் தலைவர் அப்துல்லா பண்டா அபாகர் நுரைன் மீது தொடரப்பட்டிருந்த போர்க்குற்ற வழக்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) அதிகாரப்பூர்வமாக கைவிட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு அப்துல்லா பண்டாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், வழக்கு நீண்ட காலமாக விசாரணைக்கு வராமல் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, காலப்போக்கில் அவருக்கு எதிரான சாட்சியங்களும் ஆதாரங்களும் பலவீனமடைந்துள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட சம்பவங்களுக்கு அப்துல்லா பண்டாவே பொறுப்பானவர் என்பதை நிரூபிக்க தற்போதைய ஆதாரங்கள் போதுமான வலிமையுடன் இல்லை என்ற அரசுத் தரப்பின் கோரிக்கையை பரிசீலித்த தி ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், அவருக்கு எதிரான வழக்கை முடிவுக்குக் கொண்டு வர தீர்மானித்துள்ளனர்.
எனினும், எதிர்காலத்தில் புதிய மற்றும் வலுவான ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில், அப்துல்லா பண்டாவுக்கு எதிராக மீண்டும் வழக்குத் தொடர இந்தத் தீர்ப்பு எந்தவித தடையாகவும் அமையாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக