தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா, திரைப்படங்களைப் போலவே விலங்குகள் மீதான தனது அன்பிற்காகவும் ரசிகர்களிடையே அறியப்பட்டவர். குறிப்பாக செல்ல நாய்களை குடும்ப உறுப்பினர்களைப் போல நேசித்து வளர்த்து வரும் அவர், தனது செல்லப்பிராணிகளுடன் தொடர்புடைய தருணங்களை சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
த்ரிஷா பல ஆண்டுகளாக ‘சோரோ’ (Zorro) என்ற செல்ல நாயை மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்தார். அந்த நாயை தனது குடும்ப உறுப்பினராக மட்டுமல்லாமல், மகனைப் போலவே கவனித்து வந்ததாக அவர் பலமுறை குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் 2024 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் காலத்தில் சோரோ திடீரென உயிரிழந்தது த்ரிஷாவுக்கு பெரும் மனவேதனையை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில், “என் வாழ்க்கையில் மிகப் பெரிய இழப்பு இது” என்று உணர்ச்சிப்பூர்வமாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து தனது துயரத்தை ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார்.
அதன்பிறகு, த்ரிஷாவின் வாழ்க்கையில் புதிய செல்ல நாயாக ‘இஸ்ஸி’ (Izzy) இணைந்தது. அந்த நாயை மிகுந்த அன்புடன் வளர்த்து வரும் த்ரிஷா, அதற்காக தனியாக சமூக வலைத்தளப் பக்கமொன்றையும் உருவாக்கி, அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், த்ரிஷாவின் செல்ல நாய் ‘இஸ்ஸி’ பற்றிய சுவாரஸ்யமான தகவலை நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், “இந்த விஷயத்தை நான் இதுவரை எங்கும் சொல்லவில்லை. தற்போது த்ரிஷாவிடம் இருக்கும் ‘இஸ்ஸி’ என்னுடைய ‘டெடி’ (Teddy) என்ற பூடில் (Poodle) இன நாயின் குட்டிதான். என் மனைவியும் த்ரிஷாவும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் அடிக்கடி செல்ல நாய்கள் குறித்து பேசிக்கொள்வார்கள். அதன்பிறகுதான் இஸ்ஸி த்ரிஷாவிடம் சென்றது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த தகவலை நான் பகிர்ந்ததற்கு த்ரிஷா தவறாக நினைக்கமாட்டார் என்று நம்புகிறேன்” என்றும் அவர் சிரிப்புடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. த்ரிஷாவின் செல்ல நாயான ‘இஸ்ஸி’யின் பின்னணிக் கதையை அறிந்த ரசிகர்கள், நடிகையின் விலங்குகள் மீதான அன்பையும், விஷ்ணு விஷாலின் குடும்பத்துடன் உள்ள நட்பையும் பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக