ஈரானுடனான மோதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான விவகாரத்தில் ஓமன் தலையிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fox News-க்கு வழங்கிய நேர்காணலின்போது, ஓமன் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால், அந்த நாட்டுக்கு எதிராக கடுமையான இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தை நிர்வகிப்பது தொடர்பாக ஈரான் மற்றும் ஓமன் அதிகாரிகளுக்கு இடையே கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்தப் பின்னணியிலேயே ட்ரம்பின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
ஈரான் சரணடைவதற்கான வெள்ளைக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரான் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், அவர்கள் சிறந்த பேச்சுவார்த்தை நடத்துபவர்களாக இருந்தாலும், தற்போது கடுமையான இழப்புகளை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை என்றும், தான் அவசரப்படவில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஈரான் அணு ஆயுதத்தை ஒருபோதும் பெற்றுக்கொள்ளாதிருப்பதை உறுதி செய்வதே அமெரிக்காவின் முதன்மையான இலக்கு என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில், ட்ரம்பின் இந்தக் கடுமையான எச்சரிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக