உலகளாவிய வெப்பநிலை உயர்வுக்கும் கடுமையான காலநிலை மாற்றங்களுக்கும் காரணமாகும் முக்கிய இயற்கை நிகழ்வான எல் நினோ நிலை தற்போது அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு (NOAA) வெளியிட்ட தகவலின்படி, மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சாதாரண அளவை விட சுமார் 0.5 டிகிரி செல்சியஸால் அதிகரித்துள்ளது. இது எல் நினோ நிலை உருவாக தேவையான அடிப்படை வரம்பை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள், இந்த முறை உருவாகும் எல் நினோ மிக வலுவானதாக மாறி “கடுமையான எல் நினோ” நிலையாக வளரக்கூடும் என எச்சரித்துள்ளனர். இது வரலாற்றில் பதிவான மிக தீவிரமான எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக மாறும் சாத்தியம் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலைமை, ஏற்கனவே உலகளவில் காணப்படும் புவி வெப்பமயமாதலுடன் இணைந்தால், வரும் காலங்களில் அதிக வெப்பநிலை பதிவாகும் சூழல் உருவாகலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 2027ஆம் ஆண்டு உலகளவில் அதிக வெப்பம் பதிவாகும் ஆண்டாக இருக்கக்கூடும் எனவும் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
எல் நினோ தாக்கம் காரணமாக உலகின் பல பகுதிகளில் வறட்சி, அதிக மழை, வெள்ளப்பெருக்கு, வெப்ப அலைகள் மற்றும் விவசாய உற்பத்தியில் குறைபாடு போன்ற கடுமையான காலநிலை பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பூமத்திய ரேகை பசிபிக் பகுதிக்கு மேலுள்ள காற்றோட்ட மாற்றங்களும் கடல் வெப்பநிலை உயர்வுக்கு ஏற்ப வளிமண்டல மாற்றங்களும் தீவிரமடைந்து வருவதாகவும் NOAA அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக வரும் மாதங்களில் உலகம் முழுவதும் கடுமையான காலநிலை நிகழ்வுகள் அதிகரிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக