அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேவின் மனைவி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரை தினமும் சந்திக்க அனுமதி வழங்குமாறு கோரியே இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, அவரது சட்டத்தரணியும் தனியான கடிதம் ஒன்றை CID பணிப்பாளருக்கு அனுப்பியுள்ளார்.
சட்டத்தரணி அசித் சிரிவர்த்தன, தனது கட்சிக்காரரின் உடல்நிலை மற்றும் சட்ட நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பதும், நீதிமன்றத்திற்கு தேவையான தகவல்களை வழங்குவதும் தனது தொழில்முறை பொறுப்பு எனக் குறிப்பிட்டுள்ளார். அதனால் சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, தற்போது CID காவலில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை தொடர்பில் அதிகாரிகள் இதுவரை எந்தவித இறுதி தீர்மானத்தையும் அறிவிக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக