இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள சந்திப்பூர் பகுதியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மேற்கொள்ளவிருந்த ஏவுகணை சோதனை காரணமாக, ஏவுதளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த 11,442 குடியிருப்பாளர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஏவுகணை சோதனை நடைபெறவிருந்த பகுதிக்கு சுமார் 3.5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளியேற்றப்பட்ட மக்கள் பர்தான்பூர், பீம்பூர் மற்றும் துந்த்ரா ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடாக ஒரு நாளுக்கான ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு ஏவுகணை தொடர்பான தொழில்நுட்ப விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, பாலசோர், பத்ரக் மற்றும் கேந்திரபரா கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சோதனை முடிவடைந்ததும் வெளியேற்றப்பட்ட மக்கள் தங்களது வீடுகளுக்கு மீண்டும் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக