ஈழத்து மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்யிடம் தலையிட்டு உதவுமாறு இலங்கை கடற்றொழிலாளர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அகில இலங்கை கடற்றொழிலாளர் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி. சுப்பிரமணியம் கருத்து தெரிவிக்கையில், ஈழத்து மக்கள் எதிர்கொள்ளும் மீன்பிடி பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்திய மற்றும் இலங்கை அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தியாவில் 60 நாட்கள் தடை செய்யப்பட்டிருந்த இழுவைமடி மீன்பிடித் தொழில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இது இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா–இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினை கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருவதாகவும், இதுவரை நிலையான தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இரு நாடுகளின் அரசுகளும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியபோதும், எட்டப்பட்ட தீர்மானங்களை முழுமையாக அமல்படுத்தவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார். இதன் காரணமாக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சராக இருக்கும் ஜோசப் விஜய் இப்பிரச்சினையில் தலையிட்டு இரு தரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் நியாயமான மற்றும் நிலையான தீர்வு கிடைக்கச் செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இழுவைமடி மீன்பிடி தொடர்பான அத்துமீறல்களைத் தடுக்கும் வகையில் இந்தியா மற்றும் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கிடையில் நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இறுதியான ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக