உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு சுரேஷ் சலே சம்பளம் வழங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நேரடி அனுமதி மற்றும் அறிவுறுத்தலின் கீழ் இடம்பெற்றதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சுரேஷ் சலே ஒரு இராணுவ அதிகாரி என்பதை விட கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கிய நம்பிக்கைக்குரிய நபராக செயற்பட்டதாகவும், அவரது அனுமதியின்றி எந்த முக்கிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
தான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் சுரேஷ் சலேவை புலனாய்வுப் பிரிவு பதவிகளில் இருந்து நீக்கியிருந்த போதிலும், பின்னர் அவர் பாதுகாப்பு அமைச்சின் கீழ் மீண்டும் இணைக்கப்பட்டதாகவும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவகாரம் மீண்டும் தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக