ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மேலும், குறித்த வழக்குகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்காக ரூ.1.8 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தேசிய லாட்டரி சபையின் தலைவராக பணியாற்றிய காலத்தில், 2006 ஆம் ஆண்டு நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வாகனங்களை பெற்றுக்கொடுத்த முறையில் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த நான்கு வழக்குகளின் விசாரணை நீண்டகாலமாக நடைபெற்று வந்தது.
இந்த வழக்குகளுக்கான தீர்ப்பு கடந்த மே மாதம் அறிவிக்கப்படவிருந்த போதிலும், தீர்ப்பு தயாராகாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பில், சரண குணவர்தன குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்ததுடன், அவருக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு, நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான முக்கியமான நீதிமன்ற தீர்ப்புகளில் ஒன்றாகக் கருதப்படுவதுடன், அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக