மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு மயக்க மருந்து கொடுத்து அவரின் தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் கைப்பேசி ஆகியவை கொள்ளையிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூநொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி, நேற்று பிற்பகல் தனது வழக்கமான பணிகளை முடித்துவிட்டு மீண்டும் தரிப்பிடத்திற்கு சென்றுள்ளார். பின்னர் இரவு 7 மணியளவில் ஒருவர் வாழைச்சேனை வரை செல்ல முச்சக்கரவண்டியை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
அதன்பின்னர் இரவு நேரத்தில் சாரதி வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரிதிதென்னை காட்டுப் பகுதியில் முச்சக்கரவண்டியுடன் அவர் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்த தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் கைப்பேசி அனைத்தும் கொள்ளையிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மயக்க மருந்து கொடுத்து இந்த கொள்ளை நடத்தப்பட்டிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக மற்றும் வாழைச்சேனை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக