அனுராதபுரம் விமான நிலைய வீதியில் இடம்பெற்ற துயரமான சாலை விபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரும், அவரது வயிற்றிலிருந்த குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் அனுராதபுரத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஆர்.எம். பாக்யா நிலுபுலி வடுகொடபிட்டிய என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அநுராதபுரம் மத்திய நுவரகம்பலாத பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் கிராம உத்தியோகத்தராக பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 18ஆம் திகதி, கவரக்குளம் பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கி மற்றொரு பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிர்திசையில் வந்த சிறிய லொறி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார். அதேவேளை, அவரது வயிற்றிலிருந்த குழந்தையும் காப்பாற்ற முடியவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் லொறி ஓட்டுநரான 27 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கவரக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக