தளபதி விஜய் நடித்து, இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் மே மாதம் 7-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகக்கூடும் எனத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். விஜய்யின் இறுதித் திரைப்படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்புடன் பொங்கலுக்கு வெளியாகவிருந்த இப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் இணைய கசிவு போன்ற காரணங்களால் தள்ளிப்போனது. தற்போது விரைவில் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மே முதல் வாரத்தில் படத்தை வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அதேசமயம், இப்படத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள பாப்பாபட்டி கிராமத்தை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி சர்ச்சை வெடித்துள்ளது. பாப்பாபட்டி, பகாதேவன்பட்டி மற்றும் பேயம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், இதற்காக இயக்குநர் வினோத் மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே, தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தத்திற்குத் தான் ஆதரவு அளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள திருப்பூர் சுப்பிரமணியம், முன்னணி நடிகர்களின் சம்பள உயர்வு மற்றும் குறைவான படங்கள் நடிப்பதையும் விமர்சித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக