வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று (23.04.2026) ஆளுநர் செயலகத்தில் விசேட துறைசார் மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை, மீன்பிடி மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களின் கீழ் 2026ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊடாக 1,875 மில்லியன் ரூபா செலவில் வடிகால் புனரமைப்பு மற்றும் குளங்களின் நீர் முகாமைத்துவப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இது எதிர்வரும் சிறுபோக (யால - 2026) விவசாயச் செய்கைக்குத் தேவையான நீரை உறுதிப்படுத்தும் வகையில் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டது.
விவசாயத் துறையில் 692 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் நிலக்கடலை, பயறு மற்றும் உழுந்து போன்ற உப உணவுப்பயிர்ச் செய்கைகள் 49,814 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இலக்கிடப்பட்டுள்ளன. அதேபோல், கால்நடை உற்பத்தித் துறையில் 97 திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், 'டித்வா' வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் சுமார் 189 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்க அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்திப் பணிகளை மீளாய்வு செய்த ஆளுநர், இடைநடுவில் உள்ள கட்டட வேலைகளை விரைவாக நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்குக் கடும் உத்தரவு பிறப்பித்தார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக