முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்குத் தொடர்பாக 2015 முதல் 2021 வரை மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்பான புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. பிள்ளையானுடன் சிறையில் இருந்த ஒருவரின் சாட்சியத்தை மேற்கோள் காட்டி, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இந்த அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, சர்வதேச பயங்கரவாத விவகார ஆய்வாளர் பேராசிரியர் ரொஹான் குணரத்ன, சிறையிலிருந்த பிள்ளையானை மூன்று முறை நேரில் சந்தித்துப் பேசியுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்தச் சந்திப்புகளின் போது குணரத்னவுடன் இரு பெண்கள் சென்றுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் பின்னர் இலங்கை இராணுவத்தில் 'மேஜர்' பதவிக்கு நியமிக்கப்பட்டதாகவும் சி.ஐ.டி சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் செய்னி மௌலவி மற்றும் மில்ஹான் ஆகியோரை பிள்ளையான் தனது சிறை அறைக்கே அழைத்து இரகசியமாகப் பேசியுள்ளதாகச் சாட்சியாளர் தெரிவித்துள்ளார். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது எவராவது அருகில் சென்றால் பேச்சை மாற்றிவிடுவார்கள் என்றும், இந்தச் சந்திப்புகள் ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னரான திட்டமிடல்களுடன் தொடர்புடையதா என்ற கோணத்தில் விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக