தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) இடம்பெற்றதாகக் கூறப்படும் சுமார் 13.2 பில்லியன் ரூபா பெறுமதியான பாரிய உள்ளக நிதி மோசடி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி (CBSL) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், குறித்த வங்கியின் நிதி நிலைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பு குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி வங்கியின் சில ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட ஒரு உள்ளக விவகாரம் என்றும், இது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட கணக்குகளையோ அல்லது அவர்களின் வைப்புப் பணத்தையோ எவ்விதத்திலும் பாதிக்காது என்றும் மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.
தற்போதைய மதிப்பீடுகளின்படி, NDB வங்கி போதிய மூலதனம் (Capital) மற்றும் பணப்புழக்கத்தைக் (Liquidity) கொண்டுள்ளதாகவும், அவை மத்திய வங்கியினால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஒழுங்குமுறைத் தேவைகளை விட அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கியின் அன்றாட செயற்பாடுகளில் எவ்விதத் தடங்கலும் ஏற்படாது. மோசடி தொடர்பாக வங்கியுடனும் ஏனைய தரப்பினருடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாகக் குறிப்பிட்டுள்ள மத்திய வங்கி, வைப்புச் செய்தவர்களின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக