மத்திய கிழக்கில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள புதிய அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் இராணுவத்தினர் ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நிலைநிறுத்தப்படுவார்கள் என்றும், ஒருவேளை உடன்படிக்கை மீறப்பட்டால் "முன்பெப்போதும் இல்லாத அளவிலான பாரிய தாக்குதல்" (bigger, better, and stronger) நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்டம் கைவிடப்படுதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை நிரந்தரமாகப் பாதுகாப்பாகத் திறந்திருத்தல் போன்ற முக்கிய நிபந்தனைகள் உறுதிப்படுத்தப்படும் வரை அமெரிக்கப் படைகள் அங்கேயே முகாமிட்டிருக்கும் என்பது ட்ரம்பின் நிலைப்பாடாக உள்ளது.
'ஆபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) மூலம் ஏற்கனவே பலவீனமடைந்துள்ள ஈரானியப் படைகளை முழுமையாக அழிப்பதற்கு அமெரிக்க இராணுவம் தயாராக இருப்பதாகவும், தற்போது நமது வீரர்கள் "தயார் நிலையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்" (Loading Up and Resting) என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் 10 அம்சக் கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதாக ஈரான் தரப்பில் செய்திகள் வெளியான போதிலும், ட்ரம்ப் நிர்வாகம் தனது இராணுவ அழுத்தத்தைக் குறைக்கப் போவதில்லை என்பதை இந்த அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, ஈரானைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவே அமெரிக்கா இந்த அதிரடி உத்தியைக் கையாண்டு வருவதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக