பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ள பெரிய கட்டிட மறுசீரமைப்பு பணியிடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து காணாமல் போன தொழிலாளர்களை தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தின் போது, கட்டுமானப் பணியிடத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் தொழிலாளர் ஆய்வுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ப்ரெக்ட் ஸ்பெய்ப்ரூக் வெளியிட்ட தகவலின்படி, கட்டிடத்தின் இரண்டு மின்தூக்கிகளில் ஒன்றில் உயிரிழந்த இரண்டு அல்லது மூன்று தொழிலாளர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தீ விபத்துக்குப் பின்னர் மூன்று தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், ஆறு தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. கட்டிடத்தின் கீழ்தளத்தில் முதலில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த போதிலும், மின்தூக்கி பாதைகள் வழியாக தீ பரவி நிலத்தடி தளத்திலும் தீப்பரவல் ஏற்பட்டதால் மீட்புப் பணிகள் சிரமமடைந்ததாக பெல்ஜிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், காணாமல் போன தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அவசர சேவைப் பிரிவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக