தனிக்குடித்தன வாழ்க்கை அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில், ஆறு தலைமுறைகளைச் சேர்ந்த 83 குடும்ப உறுப்பினர்கள் ஒரே குடும்பமாக அன்பும் ஒற்றுமையும் காக்க வாழ்ந்து வரும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த அதிசய கூட்டுக் குடும்பம் ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டம், குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகப்பா குடும்பமாகும். தலைமுறைகள் மாறினாலும், குடும்ப ஒற்றுமையையும் பாரம்பரியத்தையும் இவர்கள் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர்.
குடும்பத்தில் உறுப்பினர்கள் அதிகமாக இருந்தாலும், அனைவரும் வசதிக்காக ஒன்றுக்கொன்று அருகில் அமைந்துள்ள நான்கு வீடுகளில் வசித்து வருகின்றனர். இருப்பினும், அவர்கள் வாழ்க்கை முறை, பொருளாதாரம் மற்றும் குடும்ப நிர்வாகத்தில் ஒரே குடும்பமாகவே செயல்படுகின்றனர்.
இந்த குடும்பத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம், 83 பேருக்குமான உணவும் ஒரே சமையலறையில் தினமும் தயாரிக்கப்படுவதாகும். குடும்பத்தின் மருமகள்கள் அனைவரும் சமையல் மற்றும் வீட்டு வேலைகளை ஒற்றுமையுடன் பகிர்ந்து செய்து வருகின்றனர்.
வயது, அனுபவம் மற்றும் திறமைக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதால், குடும்ப நிர்வாகம் எந்தவித சிக்கலுமின்றி நடைபெறுகிறது. குடும்பத்தின் மூத்தவர்கள் முக்கிய முடிவுகளை ஆலோசித்து எடுப்பதோடு, இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் இருந்து வருகின்றனர்.
இளைஞர்கள் குடும்பத்தின் 120 ஏக்கர் விவசாய நிலங்களையும், 4 பேருந்துகள் மூலம் நடைபெறும் தொழிலையும் முழுப் பொறுப்புடன் கவனித்து வருகின்றனர். இந்த தொழில்களில் இருந்து கிடைக்கும் வருமானம் யாருக்கும் தனித்தனியாகப் பிரிக்கப்படாமல், ஒரே பொதுக் கணக்கில் சேர்க்கப்பட்டு குடும்பத்தின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
அன்பு, விட்டுக்கொடுத்தல், பரஸ்பர நம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வு இருந்தால், பெரிய குடும்பத்தையும் பல தலைமுறைகளாக வெற்றிகரமாக வழிநடத்த முடியும் என்பதை இந்த நாகப்பா குடும்பம் வாழ்வின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளது.
இவர்களின் ஒற்றுமை மற்றும் குடும்ப வாழ்க்கை முறை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ஆயிரக்கணக்கானோரின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்று வருகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக