நாட்டில் டெங்கு தொற்றுநோய் வேகமாக அதிகரித்து வருவதாகவும், தற்போதைய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போதுமான பலனை அளிக்கவில்லை என்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜூலை மாதத்தின் முதல் வார இறுதியில் 142 ஆக இருந்த அதி அபாய சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளின் எண்ணிக்கை தற்போது 175 ஆக உயர்ந்துள்ளது. இது டெங்கு பரவல் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டும் முக்கிய அறிகுறியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இது 'சிவப்பு எச்சரிக்கை' விடுக்கப்பட வேண்டிய நிலைமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் கீழ்மட்ட தீர்மானங்கள் போதுமான வேகத்தில் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டெங்கு பரவலை கட்டுப்படுத்த தேசிய மட்டத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க ஜனாதிபதி செயலணி ஒன்றை அவசரமாக அமைக்க வேண்டியது அவசியம் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், தற்போதைய நிலை தொடருமானால், 2017 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட பாரிய டெங்கு பரவலைப் போன்ற நிலை மீண்டும் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 32 டெங்கு மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில், ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் 15 மரணங்கள் பதிவாகியுள்ளமை கவலைக்குரிய விடயமாகும் எனவும், இது டெங்கு தொற்றுநோய் தீவிரமடைவதற்கான முன்அறிகுறியாகக் கருதப்பட வேண்டும் எனவும் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக