நாடாளுமன்ற உறுப்பினர் Namal Rajapaksa கலந்து கொள்ளவிருந்த Oxford Union மற்றும் Cambridge Union அமைப்புகளில் திட்டமிடப்பட்டிருந்த விரிவுரைகள் ரத்து செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் Ali Sabry வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ சமூக ஊடக கணக்கில் வெளியிட்ட பதிவில், ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற விவாத சங்கங்கள் பல தலைமுறைகளாக துணிச்சலான விவாதங்களுக்கும் பகுத்தறிவு சார்ந்த கருத்துப் பரிமாற்றங்களுக்கும் அடையாளமாக திகழ்ந்துவருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கேம்பிரிட்ஜ் சங்கத்தில் தாம் உரையாற்றியிருந்த அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், இத்தகைய தளங்கள் கருத்து வேறுபாடுகளை வெளிப்படையாகவும் மரியாதையுடனும் அறிவுசார் நேர்மையுடனும் எதிர்கொள்ள ஒரு அரிய வாய்ப்பை வழங்குகின்றன என தெரிவித்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட சில குழுக்களின் அழுத்தம் காரணமாக நிகழ்வுகளை ரத்து செய்வது வருந்தத்தக்கது எனக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற நடவடிக்கைகள் சிவில் சமூகத்தில் பிளவுகளை உருவாக்கும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இத்தகைய சம்பவங்கள் இலங்கையின் எதிர்கால நல்லிணக்க முயற்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்த அவர், எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டவர்களுடன் உரையாடவும், கேள்வி எழுப்பவும், கேட்டறிந்து கொள்ளவும் உள்ள மனப்பாங்கே ஜனநாயகத்தின் அடிப்படை என வலியுறுத்தியுள்ளார். கருத்து வேறுபாடுகளை அடக்குவது ஜனநாயக முன்னேற்றத்திற்கும் பல்கலைக்கழகங்கள் நிலைநிறுத்த விரும்பும் சுதந்திரக் கொள்கைகளுக்கும் எதிரானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக