கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி, அட்லாண்டாவில் நடைபெற்ற தமிழ் சங்க விழாவில் பங்கேற்கப் பேச்சாளர்கள் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் சென்றிருந்தனர். அங்கு அவர்களுக்கு உணவு சமைத்து வழங்கும் பொறுப்பை கார்த்திகேயன் என்பவரது தங்கை ஏற்றுள்ளார்.
கார்த்திகேயன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவின் படி:
ராஜா அவர்கள் அங்குள்ளவர்களிடம் ஊர் பெயர்களைக் கேட்டு, அதன் மூலம் அவர்களின் சாதியை ஊகிக்க (Caste profiling) முயன்றார்.
காரைக்குடி என்று பதிலளித்த கார்த்திகேயனின் தங்கையிடம், "நீங்கள் செட்டியாரா?" என்று கேட்டுள்ளார்.
அவர் பதில் கூறாமல் அமைதியாக இருந்தபோதும், விடாமல் "நீங்கள் வேறு என்ன ஆட்கள்?" என்று மீண்டும் மீண்டும் துருவித் துருவி கேட்டுள்ளார்.
சாதி அடையாளங்களைத் துறந்து வெளிநாட்டில் வாழும் சூழலில், தமிழகத்திலிருந்து வந்த ஒரு பேச்சாளர் இத்தகைய செயலில் ஈடுபட்டது அந்தப் பெண்ணை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கியதாகவும், அவர் கண்ணீர் விட்டு அழுததாகவும் கார்த்திகேயன் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் இணையத்தில் பேசுபொருளானதைத் தொடர்ந்து, ராஜா ஒரு வீடியோ மூலம் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்:
"உணவு மிகவும் ருசியாக இருந்தது. அது செட்டிநாட்டு முறைப்படி சமைக்கப்பட்டதா என்பதை அறியவே 'செட்டிநாடா?' என்று கேட்டேன்."
"நான் 'செட்டியாரா' என்று சாதி ரீதியாகக் கேட்கவில்லை. ஊர் பெயரை வைத்து சமையல் முறையைத் தான் கேட்டேன்" என்று அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக