பிரித்தானியாவின் பல பகுதிகளை ‘சந்திரா’ என பெயரிடப்பட்டுள்ள புயல் தாக்கவிருப்பதால், அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் பொதுமக்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
வானிலை ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி, சந்திரா புயல் காரணமாக பிரித்தானியாவின் பல பகுதிகளில் பலத்த காற்று, கனமழை மட்டுமன்றி பனிப்பொழிவும் ஏற்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இதனால் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படுவதுடன், மின்சார விநியோகத்திலும் தடங்கல்கள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரித்தானிய ஆற்றல் நிறுவனம் British Gas, புயலை எதிர்கொள்ள மக்கள் முன்னெச்சரிக்கையாக சில அத்தியாவசிய பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பேட்டரி மூலம் இயங்கும் டார்ச், உபரி பேட்டரிகள் மற்றும் மொபைல் போன்களுக்கான பவர் பேங்க் ஆகியவற்றை தயாராக வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், பேட்டரி மூலம் இயங்கும் ரேடியோ இருந்தால், அவசர காலங்களில் நாட்டு நடப்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை அறிந்து கொள்ள உதவும் என்றும் British Gas தெரிவித்துள்ளது. அத்துடன், எளிதில் கெடாத உணவுப் பொருட்கள், போர்வைகள் போன்றவற்றையும் கையிலே வைத்திருக்குமாறு மக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்திரா புயலின் போது மின்சாரம் தடைபடும் வாய்ப்பு அதிகம் என்பதால், ஒளி வழங்கும் சாதனங்கள் மற்றும் அவசர கால தொடர்பு சாதனங்களை முன்னுரிமையுடன் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக