உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளின் வணிக உரிமைகளில் தனியார் முதலீட்டாளர்களை இணைக்கும் திட்டத்தை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) முன்னெடுத்தால், அதன் போட்டிகளைப் புறக்கணிக்கத் தயார் என ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (UEFA) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், UEFA-வின் 55 உறுப்பு நாடுகளும் ஒருமனதாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கிண்ணம் மற்றும் பிற முக்கிய சர்வதேச கால்பந்து போட்டிகளின் உரிமைகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் FIFA-வின் திட்டத்திற்கு UEFA தனது தீவிர எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. உலகக் கிண்ணம் என்பது கால்பந்து விளையாட்டின் வரலாற்று சிறப்புமிக்க சொத்தாகும் என்றும், அதை வணிக முதலீட்டுப் பொருளாக மாற்றக் கூடாது என்றும் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மேலும், இந்தத் திட்டம் முழுமையாக கைவிடப்பட்டு, எதிர்காலத்தில் போட்டிகளின் உரிமைகள் அல்லது நிர்வாகம் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படமாட்டாது என்ற உறுதியை FIFA வழங்கும் வரை, UEFA-வைச் சேர்ந்த எந்த தேசிய அணியும் FIFA நடத்தும் போட்டிகளில் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ, 'FIFA Forward Enterprise (FFE)' என்ற புதிய வணிக நிறுவனத்தின் மூலம் உலகக் கிண்ணம் மற்றும் பிற வணிக நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் திட்டம் தொடர்பாக கால்பந்து அமைப்புகளுடன் போதுமான ஆலோசனைகள் இன்றி இரகசியமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக UEFA குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கிடையில், புதிய நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகள் FIFA வசமே தொடரும் என்றும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிறுபான்மை பங்குகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் FIFA தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள UEFA, தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக