மலேசியாவில் தஞ்சமடைந்து வாழ்ந்து வரும் 5,000 ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் மியன்மாருக்கு அழைத்துச் செல்ல அந்நாட்டு அரசு இணக்கம் தெரிவித்துள்ளதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
மலேசியாவில் உள்ளூர் மக்களுக்கும் ரோஹிங்கியா அகதிகளுக்கும் இடையே அண்மைக்காலமாக பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் அன்வார் இப்ராஹிம், மியன்மாருடன் மலேசியா பேணிவரும் நல்லுறவின் காரணமாகவே இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மியன்மாருக்கு மீள அனுப்பப்படவுள்ள 5,000 ரோஹிங்கியா அகதிகளை அடையாளம் கண்டு, அவர்களின் விவரங்களை பரிசீலிக்கும் பொறுப்பு உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். இந்த செயல்முறை நிறைவடைந்த பின்னர், மியன்மார் அரசுடன் வெளியுறவுத்துறை ஊடாக இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த பெப்ரவரி மாத நிலவரத்தில் மலேசியாவில் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணையர் அலுவலகத்தில் (UNHCR) சுமார் 1,26,000 ரோஹிங்கியா அகதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவில் அகதிகளுக்கென தனித்துவமான சட்ட அமைப்பு இல்லாத காரணத்தால், அவர்கள் சட்டவிரோத குடியேறிகளாகவே கருதப்படுகின்றனர்.
இதற்கிடையில், மியன்மாரில் தொடர்ச்சியாக நிலவி வரும் உள்நாட்டு மோதல்கள் மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அகதிகளை அங்கு திருப்பி அனுப்புவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
மேலும், சர்வதேச மனித உரிமை மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டங்களின்படி, உயிருக்கு ஆபத்து நிலவும் பகுதிகளுக்கு அகதிகளை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பக் கூடாது என்பதையும் அந்த அமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக