தென்கொரியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 25 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த ஆண்டு எட்டப்பட்ட வர்த்தக உடன்படிக்கையை தென்கொரியா முறையாக பின்பற்றவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வாகனங்கள், மரம், மருந்துகள் உள்ளிட்ட அனைத்து “பரஸ்பர வர்த்தகப் பொருட்களுக்கும்” இதுவரை விதிக்கப்பட்டிருந்த 15 சதவீத வரி, இனி 25 சதவீதமாக உயர்த்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
உடன்படிக்கையின்படி அமெரிக்கா தனது வரிகளை விரைவாகக் குறைத்திருந்த போதிலும், தென்கொரிய நாடாளுமன்றம் அந்த வர்த்தக உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்குவதில் மந்தகதியில் செயற்படுவதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, அமெரிக்காவின் இந்தத் தீர்மானம் குறித்து தமக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை என தென்கொரியா தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக