வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சுண்டிக்குளம் – பூனைத்தொடுவாய் அண்மித்த பகுதியில் கடற்தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம் நேற்று (26.01.2026) நண்பகல் நேரத்தில் நடைபெற்றது.
கடந்த அரசின் காலப்பகுதியில், உழவு இயந்திரத்தில் இணைக்கப்பட்ட வீஞ்சு முறையிலான கரைவலைத் தொழிலை மேற்கொள்ள நீரியல்வளத் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அந்த அனுமதியின் அடிப்படையில் தற்போது தொழிலை மேற்கொள்ள முயன்றபோது, நீரியல்வளத் திணைக்களத்தினரால் திடீரென அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதன் காரணமாக நூற்றுக்கணக்கான கடற்தொழிலாளர்களும், சம்மாட்டிகளும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக கேள்விக்குறியாகியுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். உடனடியாக இந்த தொழிலை நிறுத்தும் நிலை ஏற்பட்டால், பல கோடி ரூபா நட்டத்தை எதிர்நோக்க வேண்டிய சூழல் உருவாகும் என்றும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
மேலும், சுண்டிக்குளம் கடற்கரையோர பகுதிகளில் நூற்றுக்கணக்கான இந்திய கடற்தொழிலாளர்களின் றோளர் படகுகள் ஆக்கிரமித்துள்ளதாகவும், அவற்றை கட்டுப்படுத்த முடியாத நீரியல்வளத் திணைக்களத்தினர், உள்ளூர் கடற்தொழிலாளர்களின் கரைவலைத் தொழிலையே தடுத்து நிறுத்துகின்றனர் என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு, தமக்கு தேவையான கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்றும், தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக