அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தம் பலவீனமானதாகவும் நிலையற்றதாகவும் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்யா வரவேற்றிருந்த போதிலும், அதன் தற்போதைய நிலைமை அது மிகவும் பலவீனமானது என்பதை நிரூபித்துள்ளதாக புடின் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஈரானுக்கு ரஷ்யா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் உரையாற்றியபோதே புடின் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மாநாட்டுக்கு இடையே ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானையும் புடின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கடந்த ஜூன் மாதத்தின் மத்தியில், பாகிஸ்தான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தின் மூலம் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், 60 நாட்கள் காலக்கெடுவுடன் போர்நிறுத்தத்தை நீடிப்பதற்கான ஏற்பாடுகள் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த காலக்கெடு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போதைய போர்நிறுத்த சூழ்நிலை தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக