அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் மேயருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், அவரது விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, சந்தேகநபரை எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் தற்போது உடல்நலக் குறைவு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரை நீதிமன்றத்தில் நேரடியாக முன்னிலைப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயராக பதவி வகித்த காலப்பகுதியில், அங்கு பணியாற்றிய பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி, அவரை பாலியல் ரீதியாகவும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியும் துன்புறுத்தியதாக முன்னாள் மேயருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் குறித்த பெண் சமூக வலைத்தள நேரலை ஒன்றின் மூலம் தனது குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் 18ஆம் திகதி முதன்முறையாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், தொடர்ந்து ஆகஸ்ட் 19ஆம் திகதி மற்றும் செப்டம்பர் 1ஆம் திகதி நடைபெற்ற நீதிமன்ற நடவடிக்கைகளின்போதும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது மூன்றாவது முறையாக அவரது விளக்கமறியல் செப்டம்பர் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், சட்டரீதியான விசாரணை மற்றும் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் வரை சந்தேகநபர் குற்றவாளி எனக் கருத முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக