லெபனான் ஆயுதப் படைகளுக்கு ஆலோசனை வழங்கி பயிற்சி அளிப்பதற்கான புதிய திட்டம் ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கலாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் ஐக்கிய நாடுகள் அமைதிப்படைக்கு மாற்றாக செயல்படுவதற்கான நடவடிக்கை அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். மாறாக, லெபனான் தனது நாட்டின் பாதுகாப்பைத் தானே உறுதிப்படுத்திக் கொள்ளும் திறனை வலுப்படுத்துவதே ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
புதிய திட்டத்தின் கீழ் எல்லைப் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகிய துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1978ஆம் ஆண்டு இஸ்ரேல் தெற்கு லெபனான் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைதிப்படையின் பணிக்காலம் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
லெபனானின் ஆயுதப் படைகள் மற்றும் அந்நாட்டின் பிராந்தியத்தைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் திறனை மேலும் வலுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இதற்கான திட்டமிடல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதுடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் ஐரோப்பிய பேரவையின் முறையான ஒப்புதலைப் பெற்று திட்டத்தை ஆரம்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக காஜா கலாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், லெபனான் இராணுவம் மற்றும் பொலிஸ் படைகளுக்கு ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கும் வகையில் மூன்று ஆண்டுகளுக்கான இராணுவ மற்றும் சிவிலியன் திட்டம் தொடர்பான முன்மொழிவை ஐரோப்பிய ஒன்றியத்தின் ராஜதந்திர சேவைப் பிரிவு சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக