அரசியல் நயவஞ்சகம் காரணமாகவே எதிர்க்கட்சிகள் 22ஆம் அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து வருவதாக ஸ்ரீலங்கா தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது ஜனநாயகத்தையோ அல்லது நீதித்துறையின் சுயாதீனத்தையோ பாதுகாப்பதற்காக அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
மாறாக, எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளையும் சிறைத் தண்டனைகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தினாலேயே சில எதிர்க்கட்சியினர் இந்த சட்டமூலத்தை எதிர்ப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஹட்டன் நகரில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே சமீர பெரேரா இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தினர் நீண்டகாலம் ஆட்சியில் இருப்பதற்கு வழிவகுத்ததாகக் கூறப்படும் 18ஆம் அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டபோது மௌனம் காத்த சிலர், தற்போது 22ஆம் திருத்தத்திற்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாப்பவர்களாகத் தங்களை முன்னிறுத்த முயற்சிப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
அத்துடன், அப்போது நாட்டில் குடும்ப ஆட்சி நிலவியதாகக் கூறப்பட்ட காலத்தில் நீதிமன்றத்தை நாடாத ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட சில தரப்பினர், தற்போது நீதிமன்றத்தை நாடுவது மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் தங்களது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே செயற்பட்டு வருவதாகவும் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் மாதங்களில் இடம்பெறக்கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறைத் தண்டனைகளில் இருந்து தப்பிப்பதற்காகவே சிலர் 22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக செயற்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக