இந்தியாவின் விமான நிலையங்களில் எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கு பயணிக்கும் பயணிகள் குடிவரவு கவுன்ட்டர்களில் அச்சிடப்பட்ட போர்டிங் பாஸை கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குடிவரவு பணியகம் வெளியிட்டுள்ளது.
புதிய நடைமுறையின் கீழ், அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ்களுக்கு பதிலாக பயணிகளின் கையடக்கத் தொலைபேசி அல்லது பிற மின்னணு சாதனங்களில் காணப்படும் ஈ-போர்டிங் பாஸ்களை குடிவரவு கவுன்ட்டர்களில் பயன்படுத்த முடியும்.
இதுவரை அச்சிடப்பட்ட போர்டிங் பாஸில் குடிவரவு முத்திரை குத்தப்படும் நடைமுறையால் பயணிகளுக்கு நேர விரயம் மற்றும் விமான நிலையங்களில் தாமதங்கள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புதிய ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை மூலம் இந்த சிரமங்களை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், பயணிகள் விரும்பினால் அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ்களை தொடர்ந்து பயன்படுத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 2026 செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ்களில் குடியேற்ற முத்திரை குத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், இந்த புதிய நடைமுறை அவர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக